பட்டர்வொர்த், ஜூலை.03-
பினாங்கு பட்டர்வொர்த், ஜாலான் சுங்கை ஙியோர் தொடக்கப்பள்ளி முன்புறம், அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபரான ஓர் இந்திய வர்த்தகர், ஏற்கனவே 4 குற்றவியல் பதிவுகளைக் கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த வர்த்தகர் குண்டர் கும்பல் நடவடிக்கையில் ஈடுபட்டதற்கானக் குற்றப்பதிவுகள் இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை நடத்திய சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக போலீசார் தற்போது தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
போலீசார் மேற்கொண்ட பூர்வாங்க விசாரணையின்படி, ஜாலான் சுங்கை ஙியோர் தொடக்கப்பள்ளிலிருந்து தனது மகனை ஏற்றுவதற்கு ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தில் வந்த அந்த வர்த்தகரை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.
துப்பாக்கித் தோட்டாக்கள் அந்த வர்த்தகரின் வாகனத்தைத் துளைத்ததால் அவர் உயிர் தப்பினார். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளிலில் வந்த இரு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என்று பினாங்கு மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்துள்ளார்.
அந்த வாகனத்தை நோக்கி 5 துப்பாக்கிச் சூடுகள் பாய்ந்துள்ளன என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








