May 6, 2026
Thisaigal NewsYouTube
உணவகப் பணியாளரை தாக்கியதாக நளினி கோதண்டபாணி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

உணவகப் பணியாளரை தாக்கியதாக நளினி கோதண்டபாணி மீது குற்றச்சாட்டு

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.08-

உணவகப் பெண் பணியாளர் ஒருவரைத் தாக்கியதாக தகவல் தொழில்நுட்பப் பொறியாளர் ஒருவர், பெட்டாலிங் ஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

41 வயது நளினி கோதண்டபாணி என்ற தகவல் தொழில்நுட்பப் பொறியாளர், கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கான், செர்டாங் ராயாவில் ஷெல் நிலையத்தில் உள்ள மெக்டோனல்ஸ் உணவகத்தில் அதன் பணியாளரான 46 வயது ராணி ஆறுமுகத்தைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

மாஜிஸ்திரேட் Amira Saroaty Zainal முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட நளினி கோதண்டபாணி, தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நளினி கோதண்டபாணி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

நளினிக்கு 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கப்பட வேண்டும் என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் சையிட் அஹ்மாட் கபீர் அப்துல் ரஹ்மான் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்தார்.

எனினும் நளினிக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், புற்றுநோய் மற்றும் இருதய கோளாற்றினால் அவதியுற்று வரும் தனது பெற்றோரைக் கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதால் குறைந்த ஜாமீன் தொகையை விதிக்குமாறு அவரின் வழக்கறிஞர் டினேஷ் முதால் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஒரு நபர் உத்தரவாதத்துடன் நளிளி 2 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News