கோலாலம்பூர், பிப்ரவரி.12-
இந்தியச் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் முகநூலில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் செக்கு சந்திரா என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
செக்கு சந்திரா என்று அடையாளம் காணப்பட்ட அந்தச் சந்தேக நபர், நேற்று புதன்கிழமை மாலை 3 மணியளவில் கைது செய்யப்பட்டார். விசாரணையின் ஒரு பகுதியாக அவரது கைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் தன்னைப் பின் தொடருவோரின் கவனத்தை ஈர்க்கவும், தனது அதிருப்தியை வெளிப்படுத்தவும் அந்தப் பதிவைச் செய்ததாக விசாரணையின் போது செக்கு சந்திரா ஒப்புக் கொண்டார் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
மலேசியாவில் வசிக்கும் இந்தியச் சமூகம் நாகரிகமற்றது என்றும், சட்டவிரோதக் கோயில்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தது குறித்தும் அவருக்கு எதிராக அளிக்கப்பட்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டு, கோலாலம்பூர் டாங் வாங்கி போலீஸ் தலைமையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக டத்தோ ஃபாடில் மார்சுஸ் குறிப்பிட்டார்.
செக்கு சந்திராவிற்கு எதிராக 1948 ஆம் ஆண்டு தேசத் துரோகச் சட்டம், 505 குற்றவியல் சட்டம், 1998 ஆம் ஆண்டு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இனம், மதம் மற்றும் அரச பரிபாலம் என்ற 3R சார்ந்த விவகாரங்களில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் எதையும் பதிவிட வேண்டாம் எனப் பொதுமக்களை ஃபாடில் மார்சுஸ் வலியுறுத்தியுள்ளார்.
புகழுக்காகவோ அல்லது ஆதரவு திரட்டவோ, அல்லது கவன ஈர்ப்புக்காகவோ இத்தகைய உணர்வுகளைத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.








