கோலாலம்பூர், மார்ச்.22-
மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் மற்றும் அவரது மனைவி சித்தி ஹாஸ்மா முஹமட் அலி ஆகிய இருவரும் ஹரி ராயா பண்டிகையையொட்டி புதுப்பிக்கப்பட்ட Bangunan Sultan Abdul Samad கட்டிடத்தைப் பார்வையிட்டனர்.
டாக்டர் மகாதீர் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்த வீடியோவில், அவர் ஒரு வாகனத்தில் அமர்ந்து, கடந்த ஓர் ஆண்டாக மேற்கொள்ளப்பட்ட கட்டிடப் புதுப்பிப்புப் பணிகள் குறித்து விளக்கங்கள் கேட்டு அறிந்து கொள்வது போலான காட்சிகளைக் காண முடிந்தது.
மேலும், அக்கட்டிடத்தின் வயது குறித்து அவர் கேள்வி எழுப்பிய போது, அது 1897-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகவும், தற்போது 129 ஆண்டுகள் பழமையானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இப்பார்வையிடலின் போது, மகாதீரும், அவரது மனைவியும் சுவாரஸ்யமான உரையாடலில் ஈடுபட்டதோடு, ஹரி ராயா வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.
வாகனத்தில் இருந்தபடியே அவர்கள் வழங்கிய செய்தியில், மலேசியா முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு அமைதியான மற்றும் வளமான ஹரி ராயா கொண்டாட்டங்கள் அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.








