செபாங் , ஆகஸ்ட் 12-
கடந்த ஜுலை 11 ஆம் தேதி சைபர்ஜெயா அருகில் மஜு நெடுஞ்சாலை டோல் சாவடியில் ஒரு சீன நாட்டுப் பிரஜையும், ஓர் உள்ளூர் பெண்ணும் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மேலும் நான்கு சந்தேகப்பேர்வழிகளை தேடி வருகின்றனர்.
அந்த இரண்டு நபர்களை கடத்திச் செல்வதிலும், அந்த கடத்தலை திட்டமிட்டதிலும் மொத்தம் 18 நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் பிடிபட்டுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.
தேடப்பட்டு வரும் உள்ளூரைச் சேர்ந்த இந்த நான்கு நபர்களில் மூவர் ஆண்கள் என்றும் ஒருவர் பெண் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த நான்கு நபர்களும் இன்னமும் நாட்டிற்குள்தான் இருக்கின்றனர் என்று இன்று சிப்பாங் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ உசேன் உமர் தெரிவித்தார்.
இந்த கடத்தலில் ஈடுபட்ட நான்கு முக்கிய நபர்களை போலீசார் கடந்த ஆகஸ்ட் முதல் தேதி, ஜோகூர், ஸ்கூடாய்- யில் சுட்டுக்கொன்றதாக அவர் மேலும் கூறினார். .
இதுவரையில் பிடிபட்ட நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணத்தையும் செய்தியாளர் கூட்டத்தில் டத்தோ உசேன் உமர் காட்டினார்.








