துன் மகாதீர் முகமது வின் நெருங்கிய நண்பரும், நீண்ட காலம் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தவருமான துன் டாயிம் ஜைனுதீனின் குடும்பத்திற்கு சொந்தமாக 60 மாடி கொண்ட மெனாரா இல்ஹாம் கோபுரத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்து இருப்பது , நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட நடவடிக்கையாகும் என்று சிலாங்கூர் மாநில லஞ்ச ஊழல் துடைத்தொழிப்பு குழுவின் உறுப்பினர் டாக்டர் ஹெல்மி இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அம்னோவின் முன்னாள் பொருளாளரான துன் டாயிம் ஜைனுதீனின் குடும்பத்திற்கு சொந்தமான கோலாலம்பூர் மாநகரில் பெட்ரோனாஸ் கோபுரத்திற்கு அருகில் உள்ள 270 கோடி வெள்ளி மதிப்புள்ள அந்த கோபுரம், ஒரே இரவில் திட்டமிட்டு பறிமுதல் செய்யப்பட்டது அல்ல. மாறாக, பல கோடி வெள்ளி பெறுமானமுள்ள அந்த கட்டடத்தை பறிமுதல் செய்யப்படுவதற்கு முன்னதாக நீண்ட காலம் புலன் விசாரணை செய்யப்பட்டுள்ளது என்று டாக்டர் ஹெல்மி இப்ராஹிம் தெளிவுபடுத்தினார்.
நாட்டின் தோற்றம், நேர்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு இழுக்கை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சம்பவமாக இருந்தாலும் அது குறித்து விசாரணை செய்வதும், உரிய நடவடிக்கை எடுப்பதும் எஸ்பிஆர்எம் மின் உயர்நெறி கொள்கைகளில் ஒன்றாகும் என்று அவர் விளக்கினார்.








