கோலாலம்பூர், நவம்பர்.13-
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான கேபள் கம்பிகளை இலக்காகக் கொண்டு அவற்றைத் திருடி வந்ததாக நம்பப்படும் கும்பல் ஒன்றைப் போலீசார் முறியடித்துள்ளனர்.
கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 6 நபர்கள் கைது செய்யப்பட்டது மூலம் இந்தக் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
பிடிபட்ட 6 நபர்களின் பின்னணி ஆராயப்பட்ட போது யாருக்கும் வேலை கிடையாது என்பது தெரிய வந்தது. ஆனால், கேபள் கம்பிகள் திருடுவதில் கடந்த ஓராண்டு காலமாக தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
பிடிபட்ட நபர்களில் 17 வயது இளைஞரின் பிரதான வேலை, பாதாளத்தில் செல்லும் கேபள் கம்பிகள் பாதையின் மேற்புற மூடியான manhole- லை திறப்பதாகும் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஏசிபி லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.








