மஇகாவை சாடினார் பத்து எம்.பி. பிரபாகரன்
கோலாலம்பூர், செந்தூல், நாக அம்மன் ஆலயம் உடைப்பட்டதற்கு அந்த ஆலய நிர்வாகத்தின் மெத்தனப் போக்கே காரணமாகும். இந்த உண்மையைத் தெரியாமல் கோயிலை உடைத்தப்பின்னர் தமக்கே உரிய பாணியில் உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி, தம் மீது புழுதி வாரி இறைத்து, அரசியல் சர்ச்சையாக்கியிருக்கும் மஇகாவை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் . பி. பிரபாகரன் கடுமையாக சாடினார்.
YTL மேம்பாட்டாளர் நிறுவனத்தினால் கையகப்படுத்தப்பட்ட செந்தூல் நாக அம்மன் ஆலயத்தின் நில பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அந்த மேம்பாட்டாளர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது, வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது அனைத்தும் தாமே தவிர மஇகா அல்ல என்று பிரபாகரன் தெரிவித்தார்.
பத்து எம்.பி. என்ற முறையில் தமக்காக அந்த ஆலயத்தை உடைக்காமல் தம்முடன் பேச்சுவார்த்தையில் YTL ஈடுபட்டு வந்ததாகவும், ஆனால், ஆலய நிர்வாகமோ எதுவுமே கண்டு கொள்ளாமல் YTL வழங்கி மாற்று நிலத்தையும் புறக்கணித்து விட்டு 12 லட்சம் வெள்ளி இழப்பீட்டுத்தொகையிலேயே குறியாக இருந்தது. இதனை கோயில் நிர்வாகம் மறுக்க முடியுமா? என்று பிரபாகரன் கேள்வி எழுப்பினார்.
ஆலயத்தை உடைத்தப்பின்னர் தம்மீது பலவகையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஏ.கே. இராமலிங்கம் உட்பட மஇகாவினருக்கு இந்த உண்மை தெரியுமா? அல்லது தெரியாததைப் போல நாடகமாடுகிறார்களா? என்று பிரபாகரன் வினவினார்.
கோயில் விவகாரத்தில் தமக்கு எதிராக அவதூறு ஏற்படுத்திய பத்து மஇகாவை சேர்ந்த ஏ.கே.இராமலிங்கத்திற்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், , விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் பிரபாகரன் சூளுரைத்தார்.








