பாடாங் ரெங்காஸ், பிப்ரவரி.14-
அரசாங்க நிதியைக் கையாடல் செய்யத் துணியும் எவருக்கும் எதிராகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
இன்று பேராக், பாடாங் ரெங்காஸ், கம்போங் சுவாரில் உள்ள Al-Taufiqiah பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்ற ' Santuni Madani ' மற்றும் ரமலான் கொண்டாட்ட நிகழ்வில் பேசிய பிரதமர், "அரசு நிதியைப் பயன்படுத்தி எவரும் கையாடல் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன். நீங்கள் முயற்சி செய்தால், துணிந்தால்... பாருங்கள். நீங்கள் அதைச் செய்தால், நாங்கள் உங்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவோம். ஒரு வேளை நீங்கள் சுங்கை பூலோவில் நான் இருந்த அதே அறைக்கே செல்ல நேரிடும்," என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
"தலைவர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்ளும் கதைகள் மலேசியாவில் மீண்டும் நிகழக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனக்கு அதிகாரம் இருக்கும் வரை, யாரும் இதை செய்ய முயல வேண்டாம். மக்கள் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும், ஆனால் இந்த நாடு சரியான பாதையில் செல்வதை நாங்கள் உறுதிச் செய்வோம் என்று நான் நம்புகிறேன்," என்றார்.
தாம் முன்பு கமுந்திங் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தாலும், யாரிடமும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொள்ளவில்லை என்றும், ஏழைகளுக்கு உதவுவதே தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"நான் பழி வாங்க இங்கு வரவில்லை. இறைவனின் விருப்பப்படி இப்போது பிரதமராக இருக்கிறேன். எங்களிடம் உள்ள நிதியானது, மக்களுக்கான ஓர் ‘அறங்காப்பு நிதி' யாகும் என்று பிரதமர் நினைவுறுத்தினார்.








