கூலிம், ஜூலை.14-
நாட்டில் 4 முதன்மை மாநிலங்களில் போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்கள் அதிகரித்து வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
கிளந்தான் , கெடா , பெர்லிஸ் மற்றும் திரங்கானு ஆகிய 4 மாநிலங்களில் போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்களின் எண்ணிக்கை, உயர்ந்த நிலையில் இருக்கிறது.
இது போலீஸ் துறை மற்றும் போதைப்பொருள் துடைத்தொழிப்பு இலாகாவின் வாயிலாக அறிய வந்துள்ளது என்று அமைச்சர் சைஃபிடின் குறிப்பிட்டார்.
நாட்டில் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்புடையச் சம்பவங்கள் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சைஃபுடின் கவலைத் தெரிவித்தார்.
நேற்று கூலிம், ஜுன்ஜோங்கில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான கூலிம் பண்டார் பாரு அளவிலான கிராமத் தலைவர்களுடன் டுரியான் பழங்கள் சாப்பிடும் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சைஃபுடின் மேற்கண்டவாறு கூறினார்.
மக்களின் மனோநிலையில் உடல் ஆரோக்கியம், மகிழ்வு, தன்னம்பிக்கை, உற்சாகம் போன்ற சூழல் தொடர்ந்து நிலவுவதற்கு மக்கள் தங்கள் நேரத்தை நல்ல முறையில் செலவிடுவதற்கு இது போன்ற போட்டிகளை ஏற்பாடு செய்து வரும் ஏற்பாட்டாளர்களுக்கு அமைச்சர் சைஃபுடின் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பற்றிய நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடத்தப்பட வேண்டும் என்று சைஃபுடின் தமது உரையில் வலியுறுத்தினார்.
தேசிய அளவிலான போதைப்பொருள் தடுப்பு நாள் இம்மாதம் இறுதியில் கெடா மாநிலத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இதனைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார் என்றும் அவர் விளக்கினார்.








