மலேசியாவில் உள்ள சுமார் 2 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை படிப்படியாக மியான்மருக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை விரைவுபடுத்த, அந்நாட்டு அதிபர் மின் அயுங் லாயிங்கை மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக வருமாறு அழைக்கவுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ரோஹிங்கியா அகதிகள் விவகாரத்திற்கு நீண்டகாலத் தீர்வு காண்பதே இந்த தூதரக நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று கூறிய அன்வார், மியான்மர் அரசாங்கம் முதற்கட்டமாக 5,000 பேரை படிப்படியாக ஏற்றுக் கொள்ள ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவற்றில் முதல் 1,500 பேர் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மியான்மருடன் நாம் நட்பாக இருக்கலாம், வர்த்தகம் செய்யலாம். ஆனால் மியான்மர் தனது அகதிகளை மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 1 லட்சம் அல்லது 2 லட்சம் பேரை அழைத்துச் செல்ல முடியாவிட்டால், படிப்படியாக அழைத்துச் செல்லட்டும்,” என அன்வார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கான ஆடை, உணவு மற்றும் படகு கட்டணம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகளை மலேசிய அரசே ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அன்வார் அறிவித்துள்ளார்.
அகதிகளை தடுப்பு முகாம்களில் பராமரிக்க ஒருவருக்கு நாளொன்றுக்கு 50 முதல் 200 ரிங்கிட் வரை செலவாகும் நிலையில், அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான செலவு அதை விட குறைவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








