சித்தியவான், நவ.9-
பேரா, சித்தியவான், தாமான் சிங்காவில் மூன்று வீடுகள் மற்றும் நான்கு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் புலன் விசாரணைக்கு உதவும் வகையில் ஒரு பெண்ணை போலீசார் வளைத்துப் பிடித்துள்ளனர்.
நேற்று அதிகாலையில் நிகழ்ந்த இந்த தீ சம்பவம் தொடர்பில் புகார் பெறப்பட்டதைத் தொடர்ந்து 38 வயது அந்நிய நாட்டு மாதுவை போலீசார் கைது செய்து இருப்பதாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களில் ஒருவரான 42 வயதுடைய நபர், இந்த தீச்சம்பவத்தில் தமது வீடு 90 விழுக்காடு அழிந்த நிலையில் தமக்கு சொந்தமான இரண்டு கார்களும், ஒரு மோட்டார் சைக்கிளும் முற்றாக அழிந்ததாக புகார் தெரிவித்து இருப்பதாக ஹஸ்புல்லா குறிப்பிட்டார்.
தீயல் சேதமுற்ற மூன்று வீடுகளில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவின் பதிவை மீள்பார்வை செய்துப் பார்த்ததில் எண்ணெய் நிரப்பப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு கொள்கலன்களுடன் ஆடவர் ஒருவர் வீட்டிற்கு தீயிடும் காட்சியும், பின்னர் அந்த ஆடவர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்செல்வதும் தெரியவந்துள்ளதாக ஹஸ்புல்லா மேலும் கூறினார். இச்சம்பவம் தற்போது குற்றவியல் சட்டம் 436 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.








