பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், முஸ்லிம் மற்றும் இந்து சமுதாயப் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து பொதுவான நிலைப்பாட்டை உருவாக்கும் முயற்சியானது ஒரு முதிர்ச்சியான நடவடிக்கை என்று பினாங்கு முஃப்தி சுக்கி உஸ்மான் பாராட்டியுள்ளார்.
மதம் மற்றும் இன மோதல்கள் அதிகரித்து வரும் உலகளாவிய சூழலில், உரையாடல், விவாதம் மற்றும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் மனப்பான்மையானது, சமூக முதிர்ச்சியையும் நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய பார்வையில், இப்படிப்பட்ட முயற்சிகள் மனித உறவுகளின் அடிப்படை கொள்கைகளான — ஒருவரை ஒருவர் அறிதல், அமைதியாக இணைந்து வாழ்தல் மற்றும் நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்படுதல் போன்றவைகளுடன் ஒத்துப்போகின்றன என்றும் சுக்கி உஸ்மான் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று புத்ராஜயா சர்வதேச மாநாட்டு மையத்தில், மலேசிய முஸ்லிம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமா மற்றும் பல அரசு சாரா இயக்கங்கள் கலந்து கொண்ட சிறப்பு கலந்துரையாடல் அமர்வு குறித்து கருத்துரைத்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.








