கோலாலம்பூர், ஆகஸ்ட் 26-
கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் பாதாள சாக்கடையில் விழுந்து காணாமல் போன ஓர் இந்தியப் பிரஜையான விஜயலெட்சுமியின் நிலை குறித்து கண்டறிவதற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் டாக்டர் லிங்கேஸ்வரன் மற்றும் வாரிய உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் ஆகியோர் இன்று திங்கட்கிழமை காலை 11.45 மணியளவில் சம்பவ இடத்திற்கு நேரில் வருகைப்புரிந்தனர்.
நான்காவது நாளாக தேடப்பட்டு வரும் விஜயலெட்சுமியின் நிலை குறித்து தங்கள் கவலையையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்ட ராயரும், அவரின் குழுவினரும் அந்த இந்தியப் பிரஜையின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து தங்கள் ஆறுதலை தெரிவிக்க முற்பட்டனர்.
எனினும் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், தற்போது இந்திய தூதரகத்திற்கு சென்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, விஜயலெட்சுமி விரைவில் கண்டு பிடிப்பதற்கு மீட்புப்பணி தொடரப்பட வேண்டும் என்று ராயர் கேட்டுக்கொண்டார்.
விஜயலெட்சுமியை கண்டு பிடிக்கும் முயற்சி தொடர்பில் ஆகக்கடைசியான நிலவரம் குறித்து சம்பவ இடத்தில் காணப்பட்ட டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபிஆர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான், / ஜெலுத்தோங் எம்.பி.யான ராயருக்கும், டாக்டர் லிங்கேஸ்வரனுக்கும், குமரன் கிருஷ்ணனுக்கும் விளக்கம் தந்தார்.
அதேவேளையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மனதை புன்படுத்தக்கூடிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்றும்/ அந்த இந்தியப் பெண் விரைவில் மீட்கப்படுவதற்கு பிரார்த்திக்குமாறும் டாக்டர் லிங்கேஸ்வரன் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.
தவிர பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி உதவி தேவைப்படுமானால் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உதவிக் கரம் நீட்ட தயாராக இருப்பதாக RSN ராயர், டாக்டர் லிங்கேஸ்வரன் மற்றும் குமரன் கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.









