மலேசியத் தாயாருக்கு, வெளிநாட்டில் பிறக்கும் பிள்ளைகளின் குடியுரிமை உறுதி செய்யப்பட்டுள்ளதை பிகேஆர் கட்சியின் தேசிய மகளிர் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினர் காரன் கஸ்தூரி மனதார வரவேற்றுள்ளார்.
ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், மலேசியப் பெண்களின் உரிமைகளை வலுப்படுத்தி, பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வெளிநாட்டில் பிறக்கும் பிள்ளைகளுக்குக் குடியுரிமை பெறுவதில் மலேசியத் தாய்மார்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வந்ததையும் காரன் கஸ்தூரி சுட்டிக்காட்டினார்.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டத் திருத்தம், ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சமமான உரிமையை வழங்கி, நீண்டகாலப் பாகுபாட்டைச் சரிசெய்துள்ளது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதன் மூலம், அப்பிள்ளைகளுக்கான கல்வி, சட்டப் பாதுகாப்பு மற்றும் நல்வாய்ப்புகள் இனி தடையின்றிக் கிடைக்கும் என்றும் காரன் கஸ்தூரி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








