கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் அருகே நேற்று, சுமார் 31 குற்றச்செயல்களில் தொடர்புடைய உள்ளூர் நபர் ஒருவரை, போலீசார் வாகனங்களில் துரத்திச் சென்று கைது செய்தனர்.
நேற்று வழக்கமான குற்றத்தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், சிவப்பு நிற ஹோண்டா சிவிக் காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.
ஆனால், அந்த வாகன ஓட்டுநர் நிற்க மறுத்து, தப்பிச் செல்ல முயன்றதாக கேஎல்ஐஏ போலீஸ் தலைவர் எம். ரவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்நபர் கேஎல்ஐஏ முனையத்தில் 3-வது தளத்தை நோக்கி வேகமாக தப்பிச் செல்ல முயன்றபோது, அங்கிருந்த பொதுமக்களின் 5 வாகனங்களையும் மோதி சேதப்படுத்தியுள்ளார்.
அதனையடுத்து, அவரது வாகனத்தைத் துரத்திச் சென்ற போலீசார், பொதுமக்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் இன்றி அந்நபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
30 வயதான அந்நபர் மீது போதைப் பொருள் வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் எம். ரவி குறிப்பிட்டுள்ளார்.








