பிரம்படித் தண்டனை அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறி, மூன்று கைதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
தலைமை நீதிபதி வான் அகமட் ஃபரிட் வான் சல்லே தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு, 2-1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
46 வயது முகமட் ஹெல்மி அனுவார் முகமட் காசிம், 41 வயது குமணன் அந்தோணி வின்சென்ட் , மற்றும் 38 வயது ஜெ. சிவச்சந்திரன் ஆகிய மூன்று கைதிகள் இந்த வழக்கை தொடுத்து இருந்தனர்.
பிரம்படித் தண்டனை உயிருக்கு ஆபத்தானது என்றும், இது அரசியல் சாசனத்தின் பிரிவு 5 மற்றும் 8 ஆகியவற்றுக்கு முரணானது என்றும் மூன்று கைதிகள் தரப்பில் வாதிடப்பட்டது.
பிரம்படி என்பது ஒருவரை உயிரிழக்கச் செய்யும் தண்டனை அல்ல என்றும், இது 'குரூரமான அல்லது இழிவான' தண்டனை என்ற வரம்பிற்குள் வராது என்றும் நீதிபதி வான் அகமது தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
ஒரு தண்டனை என்பது சமூகத் தேவை என்று நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்; இதில் நீதிமன்றம் தலையிடுவது அதன் வரம்பைத் மீறுவதாகும் என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.








