கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் உள்ளகம்போங் முஹிப்பா மக்கள் வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளருக்கு, கொலை மிரட்டல் விடுத்த எகிப்து நாட்டவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
70 வயதுடைய அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது வீட்டில் அறை ஒன்றில் வாடகைக்குக் குடியிருந்த 20 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னை கொலை செய்து, வீட்டை தீ வைத்து எரித்து விடுவேன் என்று அந்த ஆடவர் மிரட்டியதாக அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எகிப்து நாட்டைச் சேர்ந்த அந்த ஆடவர் முறையான ஆவணங்கள் இன்றி, மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றவியல் சட்டம் பிரிவு 506-இன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அந்த ஆடவரை வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி வரையில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யவுள்ளனர்.








