வீட்டு மின்சாரப் பயனர்களுக்கான கட்டண பாதுகாப்பு வரம்பை மாதத்திற்கு 600 கிலோவாட்டிலிருந்து 800 கிலோவாட்டாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
இந்த மாற்றம் இவ்வாண்டு இறுதி வரை அமலில் இருக்கும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
அதன்படி, மாதத்திற்கு 800 கிலோவாட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு பயனர்களுக்கு தானியங்கி எரிபொருள் செலவு சரிசெய்தல் கட்டணம், சில்லறை கட்டணம் மற்றும் விற்பனை மற்றும் சேவை வரி ஆகியவை விதிக்கப்படாது.
சமீபத்திய புகைமூட்டம் மற்றும் வெப்பமான வானிலை காரணமாக மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அன்வார் தெரிவித்துள்ளார்.
அதன் படி, செப்டம்பர் மாதத்துக்கான ஏஎஃப்ஏ கட்டணம் ஒரு கிலோவாட்டுக்கு 3.67 சென் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மின்சாரக் கட்டண உயர்வால் குடும்பங்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பது குறித்து நிதி அமைச்சில் அன்வார் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யுசோஃப், தெனாகா நேஷனல் பெர்ஹாட் மற்றும் எரிசக்தி ஆணையத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதனிடையே, இந்த நடவடிக்கையை விரைவாக செயல்படுத்த உதவிய டிஎன்பி, எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் மாற்ற அமைச்சகம், எரிசக்தி ஆணையம் ஆகிய அமைப்புகளுக்கு அன்வார் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்கால மின்சாரக் கட்டண முடிவுகளில், மக்களின் வாழ்க்கைச் செலவு மற்றும் கட்டணச் சுமையை கருத்தில் கொண்டும், மின்சார விநியோக பாதுகாப்பு மற்றும் நாட்டின் எரிசக்தித் துறையின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் முடிவுகள் எடுக்கப்படுவதை அரசு தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.








