புத்ராஜெயா, பிப்ரவரி.27-
தற்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் ஆரோக்கியத்திற்காகவும் நல்வாழ்விற்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு மலேசிய மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மாமன்னருக்கு முதுகெலும்பு மற்றும் இடுப்புப் பகுதியில் தசைநார் வலி ஏற்பட்டுள்ளதாக இஸ்தானா நெகாரா இன்று அறிவித்துள்ளது. முறையான சிகிச்சை மற்றும் அவர் விரைவில் குணமடைவதற்காக, அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுக்குமாறு மருத்துவ நிபுணர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல், "மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் உடல்நிலை சீராகவும், அவர் விரைவில் நலம் பெறவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்வோம்" என்று கேட்டுக் கொண்டார்.








