கோலாலம்பூர், பிப்ரவரி.17-
மலேசியாவில் பல்வேறு இனத்தவர்களாலும் சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுவது, மலேசியர்களிடையே உள்ள ஒற்றுமை உணர்வை பிரதிபலிப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மசீச கட்சி ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இன்று கலந்து கொண்ட அவர், இக்கொண்டாட்டமானது ஒரு சமூகத்தினருக்கானது மட்டுமல்ல, அனைத்து மலேசியர்களுக்குமானது என்று குறிப்பிட்டார்.
மேலும், நெருப்புக் குதிரை ஆண்டானது, துடிப்பான மற்றும் வீரியமான வளர்ச்சியைத் தூண்டும் என தான் நம்புவதாகவும் அன்வார் தெரிவித்தார்.
அதே வேளையில், குதிரை வேகம், மகத்தான வலிமை மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது என்பதால், இவ்வாண்டு மலேசியாவின் பொருளாதார செயல்திறன் மற்றும் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.
இக்கொண்டாட்டத்தில் அன்வாருடன் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியும் கலந்து கொண்டார்.
மேலும், முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், முன்னாள் மசீச தலைவர் டான் கூன் சுவான் மற்றும் மலேசியாவுக்கான சீனத் தூதர் Ouyang Yujing உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் பாரம்பரிய yee sang tossing சடங்கில், கௌரவ விருந்தினர்களுடன் இணைந்த அன்வார், அவர்களுடன் தனது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்.








