கோலாலம்பூர், டிசம்பர்.17-
மூடா கட்சியின் முன்னாள் தலைவரும், மூவார் எம்.பி.யுமான சையிட் சாடிக் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் தாங்கள் தொடுத்துள்ள மேல்முறையீட்டை தொடர்வதென பிராசிகிஷன் தரப்பு முடிவு செய்துள்ளது.
நம்பிக்கை மோசடி, சட்டவிரோதப் பணமாற்றம், நிதியை முறைகேடு புரிந்தது ஆகிய குற்றங்களுக்காக 7 ஆண்டு சிறைத் தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரான சையிட் சாடிக்கை விடுதலை செய்து இருக்கும் அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு, கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
பிராசிகியூஷனின் மேல்முறையீட்டை கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணை செய்த கூட்டரசு நீதிமன்றம், இந்த மேல்முறையீடு தொடர்பாக தீர்ப்பு அளிப்பதற்கு முன்னதாக, சையிட் சாடிக்கிற்கு எதிராக இப்படியொரு மேல்முறையீடு அவசியம்தானா அல்லது மேல்முறையீட்டை மீட்டுக் கொள்ளப் போகிறீர்களா என்பதை நன்கு சிந்திப்பதற்கு பிராசிகியூஷன் தரப்புக்கு 7 நாள் கால அவகாசம் வழங்குவதாக அறிவித்தது.
எனினும் கூட்டரசு நீதின்றத்தின் இந்த அறிவுறுத்தலுக்கு பிறகு சட்டத்துறை அலுவலகத்துடன் தாங்கள் கலந்து ஆலோசித்ததில் தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும், மேல்முறையீட்டை தொடர்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் சட்டப் பிரிவுக்கான இயக்குநர் டத்தொ வான் ஷாஹாருடின் வான் லாடின் தெரிவித்துள்ளார்.








