பாசீர் மாஸ், டிச. 9-
நாடு வடகிழக்கு பருவமழையைக் எதிர்கொண்டு இருக்கும் இவ்வேளையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாக, பொய்யான ஆபத்து, அவசர தொலைபேசி அழைப்புகளை விடுக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் டைடின் பிச்சை எச்சரித்துள்ளார்.
கிளந்தானில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பில், பாசீர் மாஸ் போலீஸ் நிலையம் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை பெற்றுள்ளது. இதில் 114 புகார்கள், பொய்யானவையாகும் என்று அயோப் கான் குறிப்பிட்டார்.
பொறுப்பற்ற தரப்பினரின் இந்தப் போக்கு, கடமையில் ஈடுபடும் அமலாக்கத் தரப்பினரை பெரும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சேவையை வழங்குவதற்கு மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய அமலாக்கத்தரப்பினர், இப்புகார்களை நம்பி, ஸ்தலத்திற்கு விரைந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனினும் இத்தகைய புகார்களில், சம்பந்தப்பட்ட இடத்தில் ஒருவரைக்கூட காண முடியவில்லை. .இதுபோன்ற பொய் புகார்களை தொடர்ந்து அனுமதிக்க இயலாது என்பதையும் அயோப் கான் தெளிவுப்படுத்தினார்.
அடையாளம் காணப்படக்கூடிய பொய் புகார்தாரர்கள், 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர் என்று அயோப் கான் எச்சரித்துள்ளார்.
கிளந்தான், பாசீர் மாஸ், ரெப்பெக் போலீஸ் நிலையத்தற்கு வருகைப் புரிந்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அயோப் கான் மேற்கண்ட விவரத்தை தெரிவித்தார்.








