அம்னோவின் கொள்கைகளுக்குச் சவால் விடுக்கப்பட்டால், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட எவருடைய அழுத்தத்திற்கும் கட்சி பணியாது என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே வலியுறுத்தியுள்ளார்.
நெகிரி செம்பிலானில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, ரந்தாவ் சட்டமன்ற உறுப்பினராகவும் திகழும் வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான்-ஐ இலக்காகக் கொண்டு, ஜசெக இளைஞர் பிரிவு விடுத்த கோரிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ள அக்மல், அண்மையக் காலமாக அரசாங்கத்திலிருந்து அம்னோ தலைவர்களை நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், சிலாங்கூர் பிகேஆர் தேர்தல் இயக்குனர் என்.சதிய பிரகாஷ், சுங்கை ஏர் தாவார்சட்டமன்ற உறுப்பினர் ரிசாம் இஸ்மாயில்-ஐ மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதாக அக்மல் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அம்னோ தனது அடிப்படை நிலைப்பாடுகள் பாதிக்கப்படும் சூழலில், எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் அடிபணியாது என்றும் அக்மல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் உண்மையிலேயே துணிச்சல்மிக்கவர்களாக இருந்தால், அனைத்து அம்னோ அமைச்சர்கள், துணையமைச்சர்கள் மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர்களையும் நீக்கட்டும் என்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற அம்னோவின் 80-வது ஆண்டு நிறைவு மாநாட்டில் அக்மல் தெரிவித்துள்ளார்.








