கோலாலம்பூர், நவ. 8-
நாடு முழுவதும் 2026 ஆம் ஆண்டில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படுவது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது,நெகிரி செம்பிலான், பினாங்கு, கோத்தாகினபாலு, சபா ஆகிய மாநிலங்களில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடை நடைமுறைப்படத்தப்பட்டுள்ளதாக இயற்கை வள, சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமட் தெரிவித்தார்.
கூட்டரசுப்பிரதேசத்தில், மீண்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படுவதில்லை. மாறாக, இயற்கைக்கு நட்புறவாக மக்கும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தப்படுவதை அந்த மாநிலம் ஊக்குவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பிளஸ்டிக் பைகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக ஒன்பது மாநிலங்களில் நடத்தப்பட்ட மாநில அரசு, உள்ளூர் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் அமைச்சு நேர்மறையான கருத்துகளை பெற்றுள்ளதாக நிக் நஸ்மி தெரிவித்தார்.
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படுவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தொழில்துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்பினருடன் தமது அமைச்சு தொடர்ந்து ஒத்துழைத்து வருவதாக அமைச்சர் விளக்கினார்.








