கோலாலம்பூர், ஜூலை.11-
ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைக்கும் கல்வி அமைச்சின் ஏழு நடவடிக்கைகளைத் தேசிய ஆசிரியர் சேவைகள் சங்கம் என்யுடிபி வரவேற்றுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் புதியவை அல்ல என்றும், 2023 பிப்ரவரியில் கல்வி அமைச்சர் ஏற்கனவே அறிவித்தவை என்றும் என்யுடிபி தலைவர் அமினுடின் அவாங் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த முன்முயற்சிகள் ஆசிரியர்களின் சுமையைக் குறைக்க உதவியிருந்தாலும், இன்னும் மேம்பாடுகள் தேவை என்றும், இந்த முயற்சிகளை விரைவான, நடுத்தர, நீண்ட காலத் திட்டங்களாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆசிரியர்களின் பணிச்சுமை பெரும்பாலும் கற்பித்தல் அல்லாத நிர்வாகப் பணிகளால் ஏற்படுவதாகவும், குறிப்பாக தேர்வு கண்காணிப்புப் பணிகளுக்கு பொதுமக்களை நியமிக்கும் திட்டம் சிறிய அளவிலேயே உள்ளது என்றும் என்யுடிபி குறிப்பிட்டுள்ளது. எனவே, ஆசிரியர்களின் பணிச்சுமை பிரச்சினையைத் தீர்க்க ஒரு விரிவான திட்டத்தை வகுக்க ஒரு சிறப்புக் குழுவை அமைக்க அரசாங்கத்தை என்யுடிபி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.








