காஜாங்-செமினி புறவழிச்சாலையில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில், சிறுவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். மது போதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 51 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்த வேனின் பின்புறத்தில், அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 முதல் 51 வயதுடைய ஆறு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் ஓட்டுநருக்கு காயம் ஏதுமில்லை என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சொகுசு கார் ஓட்டுநர் நாளை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று நாஸ்ரோன் அப்துல் யூசோப் குறிப்பிட்டார்.








