சிங்கப்பூர், ஜூன் 20-
சிங்கப்பூர், மெரினா சவுத் பியர் படகு துறை தளத்தில், கப்பலை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ந்த விபத்தில், மலேசியாவைச் சேர்ந்த 22 வயதுடைய முக்குளிப்பாளர் ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த செவ்வாய்கிழமை மாலை மணி 2.10 அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், முக்குளிப்பாளர்களுக்கான படகின் விசிறி ஒன்றில் அவரது உடல் சிக்குண்டதாக, அந்நாட்டின் ஆட்பலத்துறை அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், கடும் காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.
அச்சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டுவரும் வேளை, அனைத்து முக்குளிப்பு நடவடிக்கைகளையும் நிறுத்திவைக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வேளையில், அச்சம்பவத்தில் குற்றச்செயலுக்கான கூறுகள் இல்லாதது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ள சிங்கப்பூர் போலீஸ், அது குறித்த விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.








