கோலாலம்பூர், மார்ச்.06-
மேற்கு ஆசியாவில், குறிப்பாக ஈரான் மற்றும் அதன் அண்டை பகுதிகளில் நிலவும் போர் பதற்றத்தைத் தொடர்ந்து, மலேசியாவின் எல்லைப் பகுதிகள் மற்றும் நாட்டின் முக்கிய இலக்குகளில் பாதுகாப்பை அதிகரிக்க அரச மலேசிய போலீஸ் படை உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய புவிசார் அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாநில போலீஸ் துறைத் தலைவர்கள் மற்றும் துறை இயக்குநர்களுக்கும் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
மலேசியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சொந்தமான அலுவலகங்கள், சொத்துக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தீவிரக் கண்காணிப்பு செலுத்தப்படும். சில தரப்பினரால் இலக்கு வைக்கப்படலாம் என அஞ்சப்படும் வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பான சூழலை உறுதிச் செய்ய ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலம் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி, நிலவும் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஐஜிபி தெரிவித்தார்.








