புத்ராஜெயா, மார்ச்.15-
கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வெளிநாட்டினர், கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில் கடப்பிதழ் கொண்டு வராமல் ஏமாற்றுவதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் புகார்கள் குறித்து சுகாதார அமைச்சு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அவசரப் பிரிவில் பணியாற்றும் ஒரு செவிலியர் மூலம் வெளிச்சத்திற்கு வந்த இந்தப் புகார் குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட், தகவல்களை வழங்கும் நபர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்து விசாரணை நடத்தப்படும் என்றார். அமைச்சின் விதிமுறைப்படி, வெளிநாட்டினர் வார்டில் அனுமதிக்கப்படும் முன் 1,400 ரிங்கிட் முதல் 2,800 ரிங்கிட் வரை வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்பதால், அதனைத் தவிர்க்க அவர்கள் அடையாள ஆவணங்கள் இல்லை எனப் பொய் கூறுவதாகக் கூறப்படுகிறது. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் Lampiran A படிவம் என்பது கட்டண விலக்கு அல்ல, அது சிகிச்சைக்குப் பிந்தைய கட்டணத் தள்ளி வைப்பு மட்டுமே என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.








