கோலாலம்பூர், செப்டம்பர் 02-
ஆடவர் ஒருவர், மிக கொடூரமாக கொலை செய்யப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, புலனம் - மூலம் இரண்டு குத்தகையாளர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்களை மிரட்டியதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், அம்பாங்கில் உள்ள இரண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
துணை கண்காணிப்பாளர் கே.கே. ரவீந்திரன் என்ற அந்த உயர் போலீஸ் அதிகாரி, கொலையுண்ட நபரின் புகைப்படத்தை ஒரு கைப்பேசி எண்ணின் வாயிலாக புலனம் -
செயலி மூலமாக 42 மற்றும் 50 வயதுடைய இரண்டு குத்தகையாளர்களுக்கு அனுப்பி வைத்து, அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக இரு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டார்.
52 வயதுடைய போலீஸ் அதிகாரி ரவீந்திரன், கடந்த ஏப்ரல் மாதம் இரவு 7.58 மணிக்கு எல்ஆர்டி சஹாயா ரயில் நிலையத்திலும் , ஜாலான் பாண்டன் இந்தா -வில் உள்ள ஓர் உணவகத்திலும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 7 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக் வகை செய்யும் குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் போலீஸ் அதிகாரி ரவீந்திரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
மாஜிஸ்திரேட் நார்மைசன் ரஹீம் மற்றும் மாஜிஸ்திரேட் அமலினா முகமது டாப் ஆகியோர் முன்னிலையில் நிறுத்தப்பட்ட ரவீந்திரன் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அவரை 4 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதிக்கப்பட்டது.








