2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சுக்மா விளையாட்டுப் போட்டிகளுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிலாங்கூர் அரசு பெரும் மாற்றத்தைச் செய்துள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவுறுத்தலின் பேரில், முதலில் ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் பட்ஜெட், தற்போது 50 மில்லியன் ரிங்கிட்டாகப் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தௌஃபிக் ஜொஹாரி, இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் மிகவும் எளிமையான முறையில் நடத்தப்படும் என்றும், சிப்பாங், பன்னாட்டு தடமில் நடைபெறவிருந்த தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் ஆட்சிக் குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி பேசுகையில் , இந்த பட்ஜெட் குறைப்பு போட்டிகளின் தரத்தையோ அல்லது தொழில்நுட்ப அம்சங்களையோ எந்தவிதத்திலும் பாதிக்காது என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சுக்மாவின் நிர்வாகச் செலவுகள் குறைக்கப்பட்டாலும், வீரர்களின் திறமையை வெளிப்படுத்தச் சிறந்த களமாக இந்தப் போட்டிகள் அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்று நஜ்வான் ஹலிமி குறிப்பிட்டார்.








