சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு தலைமையில், பந்திங் கல்லூரி MCS-இல் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ‘Jobcare Selangor’ பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் பொதுமக்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது.
இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 4,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இம்முகாமில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தகுதியுள்ள பலருக்கு நேர்முகத் தேர்வின் மூலம் அன்றைய தினமே பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இம்முகாம் குறித்து கருத்து தெரிவித்த ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு, இந்த ‘Jobcare முகாம் வேலை வாய்ப்பு மட்டுமின்றி சிலாங்கூர் அரசு அறிமுகப்படுத்திய பல திட்டங்களின் வாயிலாக வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் வறுமைக்கோட்டின் கீழ் இருந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 15,400 பேர் இருந்தனர். கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 5, 400 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பாபாராய்டு சுட்டிக்காட்டினார்.
இதேபோன்று 'Jobcare Selangor' வேலைவாய்ப்பு முகாம், சிலாங்கூர் மாநிலத்தில் இதர இடங்களில் நடைபெறும் போது இந்திய சமூகம் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பந்திங் சட்டமன்ற உறுப்பினரான பாபாராய்டு தெரிவித்தார்.
பல்லாயிரக்கணக்கானோருக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த ‘Jobcare Selangor’ முகாம், பந்திங் வட்டாரத்தில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு பெரும் பயனானதாகும் என்று பந்திங் கல்லூரி MCS கல்லூரியின் தலைமை செயல் முறை அதிகாரி தி.எஸ். டாக்டர் ரவீந்திரன் ராமசாமி குறிப்பிட்டார்.
வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, சுகாதாரப் பரிசோதனைகள், எஸ்டிஆர், ஈ-காசிஹ்,ஜேகேஎம் போன்ற உதவித்தொகை விண்ணப்பங்களுக்கான வழிகாட்டல்களும் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன. மேலும்,உள்நாட்டு வருமான வரி வாரியம்,ஊழியர் சேம நிதி, சமூகப் பாதுகாப்பு அமைப்பு போன்ற முக்கிய அரசு முகமைகளின் சேவைகளையும் பொதுமக்கள் இம்முகாமின் வாயிலாகப் பெற்று, பயனடைந்தனர்.










