மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், '2026 மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு' இலக்கை அடைய புதிய உத்திகளை வகுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சின் தலைமை துணைப் பொதுச்செயலாளர் சுவா சூன் ஹுவா, கூறுகையில், போர்ச் சூழலால் பாதிக்கப்படாத பிற பிராந்தியங்களில், குறிப்பாக ஆசிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் இனி அதிக கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மத்திய கிழக்கு மோதல்கள் மலேசியாவின் சுற்றுலா இலக்குகளை பாதிக்கக்கூடும் என்பதால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட உத்திகள் தற்போது அமைச்சின் உள்முறை கூட்டங்கள் மூலம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன என்று அவர் விவரித்தார்.
விமானத் தாமதங்கள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் இல்லாத ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை மையப்படுத்தி புதிய விளம்பர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மத்திய கிழக்கு நாடுகளைச் சுற்றியுள்ள வான்வெளியைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க, மாற்று விமான நிலையங்கள் மற்றும் போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது என்று அவர் மேலும் விவரித்தார்.








