ஷா ஆலாம், ஏப்ரல்.11-
மலேசியாவில் எரிபொருள் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில், சுமார் 52 மில்லியன் லிட்டர் டீசல் பிலிப்பைன்ஸிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பெட்ரோனாஸ் நிறுவனமும் தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றமும் அத்தகைய ஏற்றுமதி மலேசியாவிலிருந்து நடைபெறவில்லை என மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் இதற்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருவதை மூத்தப் பத்திரிகையாளர் டத்தோ அப்துல் காடீர் ஜாசின் சுட்டிக் காட்டியுள்ளார்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும் எனவும், அண்டை நாடுகளுக்கு எரிபொருளை விற்பனை செய்வதை விட மலேசிய மக்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.








