முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லியின் முன்னாள் சிறப்புப் பணி அதிகாரி ஜேம்ஸ் சாய், தான் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் செய்திகளை மறுத்துள்ளார்.
தேடப்படும் நபராக தன்னைப் பற்றி பொதுவெளியில் பகிரங்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, அதற்கு முன்பாக, எந்த ஒரு அதிகாரப்பூர்வ வழியிலும் தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தான் தலைமறைவாகவோ, தப்பியோடவோ இல்லை என்பதை ஜேம்ஸ் சாய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தனது ஷா ஆலம் வீட்டு முகவரியை பொதுவில் வெளியிட்டுள்ள SPRM, அதன் மூலம் தனது பெற்றோருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஜேம்ஸ் சாய், அங்கு செயற்கை நுண்ணறிவுத் துறையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
SPRM முறையான வழியில் விசாரணை நடத்தினால், அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் விவரித்துள்ளார்.








