நாட்டின் தாய்க் கோயிலான கோலாலாம்பூர் ஸ்ரீ மகாமாரியம்ன் கோயில் தேவஸ்தானத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பத்துமலைத் திருத்தலத்திற்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், வரும் ஜனவரி 13 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு சிறப்பு வருகை புரிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஜனவரி 25 ஆம் தேதி பத்துமலைத் திருத்தலத்தில் முருகப்பெருமானின் உற்சவத் திருநாளான தைப்பூச விழா கொண்டாடப்படும் வேளையில் டிஏபி பொதுச் செயலாளருமான அந்தோணி லோக், பத்துமலைத்திருத்தலத்திற்கு வருகை புரிவதுடன் பத்துமலை மேற்குகையில் குடிகொண்டிருக்கும் வேலாயுதர் ஆலயத்திற்கும் வருகை புரியவிருக்கிறார்.
அமைச்சர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள், தூதர்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் முதலிய முக்கியப் பிரமுகர்கள் பத்துமலைத் திருத்தலத்திற்கு வருகை புரியும் போது அவர்களுக்கு உரிய உபசரணையுடன் மேளதாள, நாதஸ்வர இசையுடன் வரவேற்பு நல்கி, மாலை, பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்வதை தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் நடராஜா தலைமையிலான கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானம் ஒரு மரபாக கடைப்பிடித்து வருகிறது.
அந்த வகையில் போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில் பத்துமலைத் திருத்தலத்திற்கு முதல் முறையாக வருகை புரியவிருக்கும் அந்தோணி லோக்கிற்கு தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா, அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் உட்பட தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் சிறப்பு வரவேற்பை நல்கவிருக்கின்றனர்.
அதன் பின்னர் நடைபெறும் செய்தியாளர் கூட்டத்திலும் அந்தோணி லோக் கலந்து கொள்ளவிருக்கிறார்.








