May 21, 2026
Thisaigal NewsYouTube
சிறைத்தண்டனையும், கூடுதல் அபராதமும் விதிக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

சிறைத்தண்டனையும், கூடுதல் அபராதமும் விதிக்கப்பட வேண்டும்

Share:

மலேசியர்கள் மத்தியில் போலி டாக்டர் பட்டத்திற்கான சான்றிதழையும், தங்கள் பெயருக்கு முன்னாள் டாக்டர் பட்டத்தையும் பயன்படுத்தி வருகின்றவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் - யை மூடா கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரா. சிவபிரகாஷ் கேட்டுக்கொண்டார்.

கெளரவ டாக்டர் பட்டங்களை தவறாக பயன்படுத்தி வரும் இத்தகைய மோசடி பேர்வழிகளினால் மலேசியாவின் கல்வி முறை தோற்றத்திற்கும், அதன் நம்பகத்தன்மைக்கும் எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம். எனவே இவ்விவகாரத்திற்கு உயர்கல்வி அமைச்சு, உடனடியாக தீர்வு காண வேண்டிய அவசரமும் அவசியமும் இருப்பதாக அதன் அமைச்சர் டாக்டர் சம்ரி அப்துல் காடிர் - க்கு நேற்று ஜனவரி 8 ஆம் தேதி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் டாக்டர் சிவபிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

டாக்டர் பட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் குரல் கொடுத்து வரும் தாம், உயர்கல்வி அமைச்சிடம் பல மகஜர்களை சமர்ப்பித்தும், அவை கிணற்றில் போட்ட கற்களாக கிடக்கின்றன என்று டாக்டர் சிவபிரகாஷ் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் கல்வி முறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய போலி டாக்டர் பட்டங்கள் பயன்படுத்தப்படுவதற்கு உயர் கல்வி அமைச்சு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இந்த தடையை மீறி, போலி டாக்டர் பட்டங்களை பெறுகின்ற மற்றும் அவற்றை பயன்படுத்துகின்ற நபர்கள் குற்றவியில் சட்டத்தின் கீழ் கூடுதல் அபராதமும், கட்டாய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூடுதல் அபராதமும், சிறைத் தண்டனையும் விதிப்பது மூலமே போலி டாக்டர் பட்டங்கள் பயன்பாட்டிற்கு உயர்கல்வி அமைச்சு ஒரு முற்றுப்பள்ளி வைக்க முடியும். இதுபோன்ற மோசடிகளை தடுக்க இயலும் என்று அமைச்சர் டாக்டர் சம்ரி அப்துல் காடிர் - க்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் டாக்டர் சிவபிரகாஷ் பரிந்தரை செய்துள்ளார்.

Related News