சுங்கை பூலோ, ஜாலான் கம்போங் பாருவில் இன்று சனிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தொழிற்சாலைகள் முற்றிலும் எரிந்து தீக்கிரையாகின.
இத்தீவிபத்து குறித்து காலை 7.32 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததை அடுத்து, சுங்கை பூலோ தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்தை ஆய்வு செய்த போது, ஏ வகை தொழிற்சாலை கட்டிடங்கள் இரண்டில், தீ வேகமாக பரவியிருந்ததைக் கண்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி நடவடிக்கை இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 26 வீரர்கள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.








