புத்ராஜெயா, பிப்ரவரி.05-
அரசு சாரா இயக்கமான NGO ஒன்றின் நிதியிலிருந்து சுமார் 4.2 மில்லியன் ரிங்கிட் தொகையைத் துஷ்பிரயோகம் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில், அந்த அமைப்பின் செயலாளர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று காலை நிறுத்தப்பட்ட அந்த நபர், எஸ்பிஆர்எம் செய்து கொண்ட விண்ணப்பித்ததைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் எஸ்ரின் ஸாகாரியா அனுமதி வழங்கினார்.
40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், நேற்று மாலை 6 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டார்.
உணவு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான இவர், கடந்த 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை இந்த மோசடியில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பந்தப்பட்ட NGO அமைப்பு, காஸா மனித நேய உதவிக்காகத் திரட்டிய பணத்தில் அந்த நபர் கை வைத்ததாகக் கூறப்படுகிறது.








