கோலாலம்பூர், பிப்ரவரி.12-
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகளை முறையான பேச்சுவார்த்தைகள் மற்றும் சட்ட ரீதியான வழிமுறைகளின் மூலமே கையாள வேண்டும் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் கேட்டுக் கொண்டார்.
பாக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மாநில அரசாங்கங்களின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆலயக் குழுவினரைச் சந்தித்துப் பேசத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் பாங்கி எம்.பி. ஷாரெட்ஸான் ஜோஹான் மற்றும் உலு லங்காட் எம்.பி. முஹமட் சானி ஹம்ஸான் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் ராயர் இதனைத் தெரிவித்தார்.
ராயரைத் தொடர்ந்து பேசிய அமானா கட்சியின் ஹுலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சானி ஹம்ஸான், அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறப்படும் கட்டடங்கள் குறித்து ஏதேனும் அதிருப்தி இருந்தால், அதனை அதிகாரிகளிடம் மட்டுமே புகாரளிக்க வேண்டும். சட்டத்தைத் தங்களது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அவர் பொதுமக்களை எச்சரித்தார்.
ஏதேனும் ஒரு கட்டடத்தின் கட்டுமானம் குறித்து நமக்கு அதிருப்தி இருந்தால், அது குறித்து அதிகாரிகளிடம் முறையிடுங்கள். நாம் அனைவரும் அமைதி காக்க வேண்டும்; நமது பகுதிகளில் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று சானி ஹம்ஸான் வலியுறுத்தினார்.








