பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 01-
உலு கிள்ளானில் உள்ள தேசிய மிருகக்காட்சி சாலையான ஜூ நெகரா -வில் விலங்குகள் மற்றும் மிருகங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், அவற்றுக்கு உணவு வழங்கப்படாமல் மிக பலவீனமாக காணப்படுகின்றன என்றும் வெளியான தகவலை அந்த தேசிய மிருகக்காட்சி சாலை வன்மையாக மறுத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டில் அடிப்படையில்லை என்றும் இது உண்மைக்கு புறம்பான தகவல் என்றும் ஜூ நெகரா குறிப்பிட்டுள்ளது. 60 ஆண்டு கால வரலாற்றைக்கொண்ட தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள ஒவ்வொரு விலங்கும், மிருகமும் முறையாகவும், கண்ணும் கருத்துமாகவும் கவனிக்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது.
குறிப்பாக, விலங்கியல் மருத்துவர்களும், பயிற்சிப் பெற்ற மருத்துவர்களும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஜூ நெகரா-வின் துணைத் தலைவர் டத்தோ ரோஸ்லி ரஹ்மத் தெரிவித்தார்.
அண்மையில் சமூக ஊடக பிரபலம் ஒருவர், விலங்குகள் மற்றும் மிருகங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை என்று முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் டத்தோ ரோஸ்லி ரஹ்மத் இந்த விளக்கத்தை தந்துள்ளார்.








