கெப்போங்கில் உள்ள உணவகம் ஒன்றில், ஓரக்கண்ணால் முறைத்துப் பார்த்தார் என்ற காரணத்தால் ஒருவரை கடுமையாக தாக்கியதாக மூவர் மீது கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
தச்சுத் தொழிலாளி வாங் வெங் லுயென், தொழில்நுட்ப நிபுணர் லாய் கே பின், நினைவு மையப் பணியாளர் வான் கென் ஃபெய் ஆகியோர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நொரிடா ஆதாம் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, மூவரும் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்.
கடந்த மே 7-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில், மெட்ரோ பிரிமா, ஜாலான் கெப்போங்-இல் உள்ள ஓர் உணவகத்தில் ஆண்ட்ரூ தே தியெக் ஹுவா என்பவருக்கு திட்டமிட்டு கடுமையான காயம் ஏற்படுத்தியதாக அவர்கள் மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 326-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.








