கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ஜோகூர்பாருவில் 7 வயது சிறுவனை கடத்தும் முயற்சியில் உடந்தையாக இருந்ததாக நம்பப்படும் மூன்று பதின்ம வயது இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
15,17,18 வயதுடைய அந்த மூன்று பதின்ம வயது இளைஞர்களும் நேற்று மாலை 5.40 மணியளவில் பொந்தியானில் கைது செய்யப்பட்டதாக ஜோகூர்பாரு, செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ராவுப் செலாமாட் தெரிவித்தார்.
அந்த மூன்று இளைஞர்களும் நான்கு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை போலீசார் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் வசிப்பிட அந்தஸ்தைக் கொண்ட சீன நாட்டுப் பிரஜை ஒருவர் , தனது 7 வயது மகனுடன் சென்று கொண்டிருந்த போது, அவர்களை மடக்கிய கும்பல் ஒன்று அந்த சிறுவனை கடத்த மேற்கொண்ட முயற்சி தோல்விக் கண்டது.
தனது மகனை காப்பாற்ற சிறுவனின் தந்தை அந்த கும்பலுடன் கடுமையாக போராடியதால் அவர் படுகாயத்திற்கு ஆளானதாக கடந்த புதன்கிழமை ஏசிபி ரவூப் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.








