கோலாலம்பூர், பிப்ரவரி.20-
கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் வீடற்ற பெண் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 46 வயதுடைய சையிட் ஃபைஸால் சையிட் அல்வி என்பவரை, பேராக், உலு கிந்தாவிலுள்ள தஞ்சோங் ரம்புத்தான் பஹாகியா மருத்துவமனையில் மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அதிகாலை வேளையில், ஜாலான் செந்தூல் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரைக் கொலை செய்ததாக சையிட் ஃபைஸால் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் ஃபாரா நபிஹா முஹமட் டான், அந்த நபரை மன நல சோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் மனநலன் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று புலனாய்வு அதிகாரி அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் Amritpreet Kaur Randhawa நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கொலை வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், அவரிடம் வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.








