டிச. 26-
கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கான 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று டிசம்பர் 26 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
இந்தோனேஷியா, சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் எழுந்த சுனாமி பேரலை, இரண்டு லட்சத்து 30 ஆயிரம் பேரை காவுக்கொண்டது. இந்தியா, இலங்கை, இந்தோனேசியா,தாய்லாந்து, மலேசியா உட்பட கடலோரப்பகுதிகளில் இருந்த 14 நாடுகள் இந்த ஆழிப்பேரலையால் பெரும் பாதிப்புக்கு இலக்காகின.
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப்பெரிய பேரழிவு என்று வர்ணிக்கப்பட்ட இந்த ஆழிப்பேரவையில் மலேசியாவில் கெடா, பினாங்கு, பெர்லிஸ், பேராக் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களின் கடலோரப்பகுதிகளில் 67 பேர் உயிரிழந்ததுடன், 135 பேர் காயமுற்றனர்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தினம் நிகழ்ந்த இந்த துயரச்சம்பவத்தை கெடா, கம்போங் சுங்கை மூடா மக்கள் இன்று பகிர்ந்துக்கொண்டனர்.
கடலோரக் கிராமமான இப்பகுதியில் மதியம் 1.30 மணியளவில் நிகழ்ந்த ஆழிப்பேரலையில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 120 வீடுகள் பாதிக்கப்பட்டதாக 60 வயது Yosoof Awang நினைவுகூர்ந்தார்.
அன்றைய தினம் கடற்கரையையொட்டிய தங்கள் கிராமத்தில் நடந்த திருமண விழாவில் மக்கள் கலந்து கொண்டிருந்த வேளையில் இந்த ஆழிப்பேரலை நிகழ்ந்து, கடல் உள்வாங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
முதலில் கடற்கரையை கடந்த சில மீட்டர் தூரம் பாய்ந்த நீர்பெருக்கு, திடீரென்று ஆழிப்பேரலையாக 500 மீட்டர் தூரம் வரை உருவெடுத்து பாய்ந்த போது கிராமத்தை முற்றாக சேதப்படுத்தியதாக யூசோப் அவாங் தெரிவித்தார்.
சுற்றுப்பயணிகளுக்கு பிரசித்திப்பெற்ற Pantai Merdeka-வில் நிகழ்ந்த இந்த துயரத்தில் கிராமத்தைச் சேர்ந்த 11 பேரை பலிகொடுக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு தாங்கள் ஆளானதாக அந்த பெரியவர் நினைவுகூர்ந்தார்.








