சுபாங் ஜெயா, ஆகஸ்ட்.22-
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 2/1 இல் கல்லூரி மாணவி ஒருவர் தாம் தங்கியிருந்த வீட்டின் பிரதான அறையில் சிலிங் மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சம்பவத்தில் அவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதற்கான குற்றத்தன்மை அறிகுறிகள் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
அந்தக் கல்லூரி மாணவியின் குடும்பத்தினர், அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் அவரின் தோழிகள் ஆகியோர் உட்பட சுமார் 30 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
இன்னும் 5 பேரிடம் விசாரணை செய்யப்பட வேண்டியிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணை முடிவடைவதற்குத் தங்களுக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால், அந்த இளம் பெண் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகவில்லை என்று சுபாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஏசிபி வான் அஸ்லான் மேற்கண்டவாறு கூறினார்.
அந்த மாணவி தங்கிருந்த வீட்டிற்கு அருகில் பொறுத்தப்பட்டுள்ள ரகசிய கேமராக்களின் பதிவைப் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். எனினும் இச்சம்பவம் ஒரு கொலை வழக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
20 வயதுடைய அந்த மாணவியின் மரணத்திற்கு விரைவில் விடை காணப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.








