கோலாலம்பூர், ஜனவரி.12-
வெளிநாடுகளுக்கான மனிதாபிமானப் பணிகளுக்காக மலேசியாவில் திரட்டப்பட்ட 2 லட்சத்து 7 ஆயிரம் ரிங்கிட் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவர் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், கடந்த 2019-ஆம் ஆண்டு, டிசம்பர் 27-ஆம் தேதி, Pertubuhan Kebajikan Serantau Muslim என்ற அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஹாக்கிம் நோர், டாயாபூமி மலாயன் வங்கிக் கிளையில் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றப்பத்திரிகையின்படி, மியன்மார், ஏமன், சிரியா மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அவர் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் பிரிவு 403-ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வரும் இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.








