சிரம்பான், ஜூலை.14-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சிரம்பானுக்கு அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு லோரி ஓட்டுநர் உயிரிழந்தார். இரு பெண்கள் காயம் அடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு, மீட்புப் படையினர் இன்று பிற்பகல் 12.51 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாக அதன் கமாண்டர் நிஸாம் யோம் தெரிவித்தார்.
ஒரு டன் லோரியும், பெரோடுவா அத்திவா ரக காரும் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்தன. லோரியின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கிய 40 வயது மதிக்கத்தக்க லோரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.
காரில் பயணம் செய்த இரு பெண்களில் ஒருவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றொருவருக்குக் கை முறிந்தது. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கமாண்டர் நிஸாம் தெரிவித்தார்.








