கடந்த வாரம் வியாழக்கிழமை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு, புக்கிட் அமான் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் படி, 2012 ஆம் ஆண்டு உள்நாட்டு பாதுகாப்பு சட்டமமான சொஸ்மாவின் கீழ் தேடப்பட்டு வந்த 5 குற்றவாளிகள் உட்பட மொத்தம் 39 தேடப்படும் நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓப் காந்தாஸ் பெர்செபாடு என்ற பெயரில், சிலாங்கூர் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையானது ஊராட்சி அமைப்புகள் மற்றும் குடிநுழைவுத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் எம்.குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட இச்சோதனையின் போது, 20 முதல் 83 வயதிற்குட்பட்ட 280 ஆண்கள் மற்றும் 69 பெண்கள் என மொத்தம் 349 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்செயல்களை ஒடுக்கவும், தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை பிடிக்கவும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தவும் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் எம்.குமார் குறிப்பிட்டுள்ளார்.








